Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger


முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு - 614 701

தொலைப்பேசி: 0091-4373-255228

மின் அஞ்சல்: sanjai28582@gmail.com

வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/

ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582

Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.

Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,


we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics

In the State of Tamil Nadu

Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer

we are known:
We have No Unity

we are Not Educationist
we are not Known our History

Yes if you have any solution share with us...............

We have Solution Accept it.................................

WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....

MUTHARAIYAR

MUTHARAIYAR
We Are Follow up................

YOUNG LION ORGANIZATION

YOUNG LION ORGANIZATION

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் Contact : 0091-9159168228 E-Mail : sanjai28582@gmail.com

வியாழன், 29 நவம்பர், 2012

உங்களுடைய இந்த ஆவணங்கள் தொலைந்தால்.. எப்படி திரும்பப் பெறுவது


 1.இன்ஷூரன்ஸ் பாலிசி!
யாரை அணுகுவது..?

...
பாலிசியை விநியோகம் செய்த கிளையை.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.

எவ்வளவு கட்டணம்?

ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை:
 
விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.

நடைமுறை:
 
நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும். இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவரங்கள்
 
 
2.மதிப்பெண் பட்டியல்!

யாரை அணுகுவது..?

பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலுத்திய ரசீது.

எவ்வளவு கட்டணம்?

உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105.

மேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505.

கால வரையறை: விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.

நடைமுறை: காவல் துறையில் புகார் அளித்து 'கண்டுபிடிக்க முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார். தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.

 
3.ரேஷன் கார்டு!

யாரை அணுகுவது..?

கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கு துறை மண்டல உதவி ஆணையர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை

எவ்வளவு கட்டணம்?

புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட வேண்டும்.

கால வரையறை: விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.

நடைமுறை:
சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.

 
4.டிரைவிங் லைசென்ஸ்!

யாரை அணுகுவது?

மாவட்டப் போக்குவரத்து அதிகாரி.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.

எவ்வளவு கட்டணம்?
கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).

கால வரையறை: விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.

நடைமுறை: காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் சான்றிதழ் வாங்கியபிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்பம்.

 
5.பான் கார்டு!

யாரை அணுகுவது?

பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள்.

எவ்வளவு கட்டணம்?

அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய்.

கால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு 45 நாட்கள்.

நடைமுறை:
பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

 
6.பங்குச் சந்தை ஆவணம்!

யாரை அணுகுவது?

சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல் அல்லது ஃபோலியோ எண்.

எவ்வளவு கட்டணம்?
 
தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால், பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை: விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள்.

நடைமுறை: முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம் எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில் புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும். பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.

7.கிரயப் பத்திரம்!

யாரை அணுகுவது..?

பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்?
ஆவணக் கட்டணம் 100 ரூபாய். இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20 ரூபாய்.

கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

நடைமுறை: கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும். இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும்.
 

 8.டெபிட் கார்டு!

யாரை அணுகுவது..?

சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

கணக்குத் தொடர்பான விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.100.

கால வரையறை: வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது அதிகபட்சம் 15 நாட்கள்.

நடைமுறை:
டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் மோசடியான பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.

9. மனைப் பட்டா!

யாரை அணுகுவது..?

வட்டாட்சியர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.?

நகல் பட்டா கோரும் விண்ணப்பம்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.20.

கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

நடைமுறை: முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர் பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும்.
 
 
10. பாஸ்போர்ட்!

யாரை அணுகுவது..?

மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20 ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.4,000.

கால வரையறை: இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40 நாட்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுக்கும்.

நடைமுறை: பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல் துறையில் புகார் அளித்து கண்டுபிடிக்கப்படவில்லை என்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்ட பிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.



11.கிரெடிட் கார்டு!

கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும்.
யாரை அணுகுவது?

நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.100 (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்).

கால வரையறை: 15 வேலை நாட்கள்.

நடைமுறை :
தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக் கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச் சான்று காண்பித்து வாங்க வேண்டும்.


Courtesy :விகடன்

ஞாயிறு, 25 நவம்பர், 2012

தொல்லியலறிஞர் நடன. காசிநாதன் அவர்கள்



அறிஞர் நடன.காசிநாதன் அவர்கள்


1990 ஆம் ஆண்டளவில் எனக்குத் தொல்லியல் அறிஞர் நடன. காசிநாதன் அவர்களின் பெயர் அறிமுகமானது. எங்கள் ஊரான கங்கை கொண்ட சோழபுரம் அகழாய்வுப்பணிகளில் ஆர்வம் காட்டி அந்தப் பகுதிக்குப் பல உதவிகளைச் செய்தார். அந்த நாளில் உள்கோட்டையில் ஒரு விழா ஏற்பாடு செய்து ஐயா அவர்களைப் பேசவும் செய்தோம்.



அச்சக ஆற்றுப்படை என்ற என் நூலுக்கு அரியதோர் அணிந்துரையும் ஐயா அவர்கள் வழங்கினார்கள்(25.07.1992). நான் சென்னையில் பணியிலிருந்தபொழுது ஒருமுறை அவர்களின் அலுவலகம் சென்று பார்த்த நினைவும் எனக்கு உண்டு. கண்ணியம் இதழ் வழியாகவும், பிற ஏடுகளின் வழியாகவும் அறிஞர் நடன.காசிநாதன் அவர்களின் ஆராய்ச்சி ஆர்வத்தைக் கண்டு பலபொழுது வியந்துள்ளேன்.



பூம்புகாரும் கடல் அகழாய்வும் என்ற அறிஞர் நடன.காசிநாதன் அவர்களின் ஆராய்ச்சி நூலைக் கற்கும் வாய்ப்பு அண்மையில் அமைந்தது. அந்த நூலைக் கற்ற பிறகு பட்டினப்பாலை நூலைக் கற்றேன். பட்டினப்பாலையின் மேன்மை எனக்கு அப்பொழுது நன்கு விளங்கியது.



பூம்புகாரின் பண்டையச் சிறப்பையும் கடல் அகழாய்வின் உண்மைகளை யும் உரைக்கும் அந்த நூலை வரைந்த அறிஞர் நடன. காசிநாதன் அவர்கள் தமிழகத் தொல்லியல் வரலாற்றில் என்றும் நினைவுகூரத்தக்கத் தொல்லியல் அறிஞர் ஆவார். அவர்தம் வாழ்க்கை வரலாற்றையும், அவர் எழுதிய நூல்களையும் கட்டுரைகளையும் தமிழுலகிற்குப் பதிந்துவைக்கின்றேன்.



தொல்லியலறிஞர், நடன. காசிநாதன் வாழ்க்கை வரலாறு:



கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், தொப்பளிக் குப்பத்தில் 01.11.1940 இல் பிறந்தவர். இவர், குழந்தைப் பருவத்திலேயே தமது தந்தையை இழந்துவிட்ட காரணத்தால், தாய்வழிப் பாட்டனார் ஊரான சிதம்பரம் வட்டம், தே.புதுப்பேட்டையில் வளர்க்கப்பட்டார். தொடக்கக் கல்வியைப் புதுப்பேட்டையிலும், புதுப்பூலாமேட்டிலும் முடித்து, சிதம்பரம் இராமகிருஷ்ணா உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதி வகுப்புவரை பயின்றார். பின்பு, 1963-இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வரலாற்றில் இளங்கலைப் பட்டம் முடித்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் தொன்மை வரலாறு மற்றும் தொல்லியல்பாடத்தில் முதுகலைப் பட்டத்தை 1965- இல் பெற்றார். இரண்டாண்டு காலம் அதே பல்கலைக் கழகத்தில் ஆய்வு மாணவராகப் பயின்ற பின்னர், 1967-இல் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் கல்வெட்டாளராகப் பணியில் சேர்ந்தார்.



வட்டெழுத்தைப் படிப்பதில் வல்லவர்



கல்வெட்டாய்வாளராகப் பணிபுரிகையில் கன்னியாகுமரி மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டம் ஆகியவற்றில் கல்வெட்டுகளை ஆய்வு செய்து பல புதிய கோயிற் கல்வெட்டுகளையும், நடுகல் கல்வெட்டுகளையும் கண்டுபிடித்தார். இவர் கண்டறிந்த பல வட்டெழுத்துக் கல்வெட்டுகளைப் படித்து, ‘வட்டெழுத்தைப் பயில்வதில் வல்லவர்என்ற பாராட்டையும் பெற்றார்.



செப்புப் பட்டயங்கள், கல்வெட்டுகள், சிற்பங்கள் கண்டுபிடித்தார்



1974 - இல் பதிவு அலுவலராகப் பதவி உயர்வு பெற்று தஞ்சையிலும், சென்னையிலும் பணியாற்றியபோது, திருத்தணிக்கு அருகிலுள்ள வேலஞ்சேரியில், பல்லவ மன்னன் அபராஜிதன், சோழ மன்னன் முதலாம் பராந்தகன் காலத்திய இரு அரிய செப்புப் பட்டயங்களைக் கண்டறிந்து துறைக்குக் கைப்பற்றினார். சென்னையில் தனியார் ஒருவரிடம் இருந்த மராத்திய மன்னர் சரபோஜியின் திருவுருவச் சிலையையும், இராயப்பேட்டையில் ஒரு புற்றுக் கோயிலுக்கருகில் இருந்த பௌத்த புடைச் சிற்பத்தையும், எல்லிஸ் துரை, கிணறுகள் அமைத்ததைத் தெரிவிக்கும் கல்வெட்டையும், காரனெட் நிறுவனத்தார் சிற்பக் கிடங்கில் இருந்த வட்டெழுத்துக் கல்வெட்டுடன் கூடிய பல்லவர் காலத் துர்க்கைச் சிலையொன்றையும் கண்டுபிடித்துத் துறைமூலம் வெளியுலகுக்குத் தெரியப்படுத்தினார்.



இராசராசனின் ஆயிரமாவது முடிசூட்டு விழா நடத்தினார்



1981-இல் துணை இயக்குநராகப் பதவி உயர்வு பெற்று பணிபுரிந்து கொண்டிருக்கையில், இயக்குநர் பொறுப்பை (Director incharge 1983- இல் ஏற்று, தஞ்சாவூரில் 1984-இல் சோழ மாமன்னன் முதலாம் இராசராசனின் ஆயிரமாவது முடிசூட்டு விழாவை, அந்நாள் மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். மற்றும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திருமதி இந்திராகாந்தி ஆகியோரைக் கொண்டு சிறப்பாக நடத்தி முடித்தார்.



இயக்குநராக நியமனம் பெற்ற பின்னர் செய்து முடித்த அரும்பணிகள்



1989-இல் துறையின் இயக்குநராகப் பதவி உயர்வு பெற்று பணியாற்றுகையில் பல நில அகழாய்வுகள் நடத்தியும், ஆங்காங்கே அகழ் வைப்பகங்களை நிறுவியும் தமிழக வரலாற்றுக்குப் புத்தொளி ஏற்படுத்தினார். இவர் காலத்தில் நிகழ்ந்த அகழாய்வுகளில் அழகன்குளம் நில அகழாய்வும், பூம்புகார் நில அகழாய்வும் மற்றும் கடல் அகழாய்வும் குறிப்பிடத்தக்கவைகளாகும். இவர் ஏற்படுத்திய அகழ் வைப்பங்களில் தஞ்சாவூர் முதலாம் இராசராசன் அகழ் வைப்பகம், பூம்புகார் ஆழ்கடல் தொல்லியல் அகழ் வைப்பகம் ஆகியவை முக்கியமானவையாகும்.



மரபுச் சின்னங்கள் பாதுகாத்தல்



1995-இல் அந்நாள் தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தலைமையில், தஞ்சையில் நடைபெற்ற எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டின் போது, தஞ்சாவூர் மராத்திய அரண்மனையில் தர்பார் மண்டபம், மணிக் கோபுரம், ஆயுதக் கோபுரம், சார்ஜா மாடி ஆகியவற்றையும்; சரபேந்திரராசன் பட்டினம் (மனோரா) உப்பரிகை, மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை, இராமநாதபுரம், இராமலிங்க விலாசம் மற்றும் அங்குள்ள ஓவியங்கள், தரங்கம்பாடி டேனிசு கோட்டை ஆகியவற்றை அவற்றின் பழமைத் தன்மை கெடாமல் பாதுகாக்கும் பணியை மேற்கொண்டு வெற்றிகரமாக முடித்தார்.



ஓலைச்சுவடி நூல் நிலைய நூல் வெளியீடு மற்றும் மேம்பாடு



சென்னை அரசு கீழ்த்திசை ஓலைச் சுவடி நூல் நிலையத்தில் 51க்கு மேற்பட்ட சுவடிகளை நூல்களாக அச்சாக்கி வெளியிட்டார். மேலும், சுவடிகள் வைத்துப் பாதுகாக்கும் கூடத்துக்குக் குளிர்சாதன வசதி செய்தார்.



கோடைக் காலக் கல்வெட்டுப் பயிற்சி



கோடைக் காலக் கல்வெட்டுப் பயிற்சியையும், ஓராண்டு காலக் கல்வெட்டுப் பட்டய வகுப்புப் பயிற்சியையும் மீண்டும் துறையில் தொடங்கி ஆண்டுதோறும் நடத்தினார். இவர் காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பல அரிய தொல்பொருள்கள் இவராலும், துறையின் பிற அலுவலர்களாலும் கண்டுபிடிக்கப் பெற்று வெளியுலகிற்குத் தெரிவிக்கப்பட்டன.



திரைப்பட வெளியீடு



தமிழகத்தின் நாகரிகச் சிறப்பு குறித்த உங்கள் பெருமையை உணர்வீர்என்னும் திரைப்படம் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும், துறையின் செயல்பாடுகள் குறித்த வீடியோபடம் தமிழிலும் தயாரித்தார்.



பூம்புகார் கடலகழாய்வு



இவர் காலத்தில் நிகழ்ந்த பூம்புகார் கடலகழாய்வு மூலம் கடற்கரையிலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் கடலுக்கடியில் 21 மீட்டர் ஆழத்தில் ஐந்து கட்டடப் பகுதிகள் இருப்பதையும், பழைய காவிரி ஆற்றுப் போக்கு கடலுக்கடியில் தெரிவதையும், சின்ன வானகிரிக்கு எதிர்த்திசையில் நாலரை கி.மீட்டர் தொலைவில் கடலுக்கடியில் 19 மீட்டர் ஆழத்தில் தரை தட்டிச் சிதைந்த, கி.பி. 18-ஆம் நூற்றாண்டுக் கப்பல் ஒன்று புதைந்து கிடப்பதையும், கடற்கரையிலிருந்து 200 மீட்டர் தொலைவில், ஏழு மீட்டர் ஆழத்தில் கருங்கல் கட்டடங்கள் சில புதைந்திருப்பதையும், கரையின் ஓரமாக அலைகள் மோதும் இடத்தில் கடலுக்கடியில் சில செங்கற் கட்டடங்கள் அழிந்திருப்பதையும், சின்னமேட்டுக்கு எதிர்த் திசையில் கடலிலிருந்து ஒரு புத்தர் சிற்பத்தையும் கண்டறிந்து வெளியுலகுக்குத் தெரிவித்தார்.



கருத்தரங்குகள் நடத்தப் பெற்றமை



பொதுமக்களிடையே மரபுச் சின்னங்கள் பாதுகாப்புப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, மாவட்டந்தோறும் வரலாற்றுக் கருத்தரங்குகள் நடத்தவும், அதையட்டி காட்சிகள் அமைக்கவும் ஏற்பாடு செய்தார். ஆழ்கடல் அகழாய்வுக் கருத்தரங்குகள் சென்னையிலும், பூம்புகாரிலும் நடத்தினார். அகில உலக ஆழ்கடல் அகழாய்வுக் கருத்தரங்கினைச் சென்னையில் நடத்தினார். இக்கருத்தரங்கைத் தமிழக ஆளுநர் மேதகு பாத்திமா பீவி அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இக்கருத்தரங்கில் ஆஸ்திரேலியா, மலேசியா, இசுரேல், இங்கிலாந்து, இலங்கை ஆகிய வெளிநாடுகளைச் சேர்ந்த பேராளர்களும், இந்திய நாட்டுப் பேராளர்களுமாக 70க்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்துகொண்டு சிறந்த ஆய்வுக் கட்டுரைகளைப் படித்தளித்தனர். அக்கட்டுரைகளின் சுருக்கம் அச்சாக்கப் பெற்றுக் கருத்தரங்கம் நடைபெற்றபோதே, பேராளர்களுக்கு வழங்கப்பெற்றது.



வெளிநாடுகளுக்குச் சென்று பன்னாட்டுக் கருத்தரங்குகளில் பங்கு பெற்றமை



இந்தியாவில் நடைபெற்ற கல்வெட்டு, நாணயவியல், தொல்லியல், இடம் பெயர் வரலாறு சம்பந்தமான தேசிய கருத்தரங்குகளில் பங்கு பெற்றுச் சிறந்த கட்டுரைகளைப் படித்தளித்ததோடு, சென்னையில் 1992-இல் நடைபெற்ற பன்னாட்டுப் பௌத்த மதக் கருத்தரங்கு மற்றும் 1990-இல் நடைபெற்ற பன்னாட்டுப் பௌத்த மதக் கருத்தரங்கு, 1981-இல் மதுரையில், 1995-இல் தஞ்சையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டுக் கருத்தரங்குகள், புதுதில்லியில் 1994-இல் நடைபெற்ற பன்னாட்டு மூன்றாம் தொல்லியல் கருத்தரங்கு, ஆஸ்திரேலியாவில் 1997-இல் நடைபெற்ற பன்னாட்டு ஆழ்கடலாய்வுக் கருத்தரங்கு, யாழ்ப்பாணத்தில் 1976- இல் நடைபெற்ற தெற்காசியக் கல்வெட்டுக் கருத்தரங்கு ஆகியவற்றில் இவர் கலந்துகொண்டு கருத்தரங்கு சார்பான சிறந்த ஆய்வுக் கட்டுரைகளைப் படித்தளித்தார்.



வெளிநாட்டுப் பயணம்



1976-இல் இலங்கைக்கும், 1986-இல் அந்தமான் தீவுக்கும், 1997&இல் சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிற்கும், கல்வி சம்பந்தமான பயணம் மேற்கொண்டார்.



வானொலி, தொலைக்காட்சி உரை



அகில இந்திய வானொலி மூலமும், தொலைக்காட்சி மூலமும் தமிழகத் தொல்லியல் துறையின் செயல்பாடுகள், மரபுச் செல்வங்களைப் பாதுகாத்தல், அகழாய்வில் வெளிக் கொணரப்பட்ட முக்கியத் தொல்பொருள்கள் ஆகியவை பற்றி பல உரை நிகழ்த்தியுள்ளார்.



பல்கலைக் கழகப் பாடத் திட்டக் குழு உறுப்பினர்



தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம், மதுரை காமராசர் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் பாடத் திட்டக் குழுக்களில் உறுப்பினராகவும், சில சமயங்களில் தலைவராகவும் இருந்து பணியாற்றி உள்ளார்.



அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆளவைக் குழு உறுப்பினர்



2004 டிசம்பர் திங்கள் 6-ஆம் நாள் முதல் மூன்று ஆண்டு காலத்துக்குச் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் ஆளவைக் குழு உறுப்பினராகத் தமிழக மேதகு ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா அவர்களால் நியமனம் செய்யப்பட்டார்.



அரசு உயர்மட்டக் குழுக்களில் உறுப்பினர்



தமிழ்நாடு அரசு தமிழ்நாடு வரலாறு எழுதும் உயர்மட்டக் குழுவில் ஐந்து முறை உறுப்பினராக இருந்து பல்லவ & பாண்டியர் வரலாறு, சோழப் பெருவேந்தர் வரலாறு, தமிழக வரலாறு (ஒரே தொகுதி) ஆகிய நூல்களுக்குச் சில பகுதிகள் எழுதியும் உதவியுள்ளார்.



தமிழ்நாடு அரசு ஆலய நிருவாக உயர்மட்டக் குழு, தமிழ் ஆட்சிமொழி உயர்மட்டக்குழு போன்றவற்றிலும் உறுப்பினராகச் செயல்பட்டிருக்கிறார். நடுவணரசு தமிழ்ச் செம்மொழி ஆய்வு நிறுவனத்தின் சான்றாதார வல்லுநராகவும் பணியாற்றியிருக்கிறார்.

அறிஞர் நடன.காசிநாதன் பெற்ற விருதுகள்



முனைவர் ந. சஞ்சீவி & காசுநாதன்; ‘கண்ணியம்இதழ் & கல்வெட்டுச் செம்மல்;



முனைவர் ச. மெய்யப்பனார்; முனைவர் ஒளவை நடராசனார் & தொல்லியல் அறிஞர்;



பத்மபூஷன் வை. கணபதிஸ்தபதி & கல்வெட்டுச் சொல்லோவியர்;



தாமரைத்திரு. ஐ. மகாதேவன் & கல்வெட்டறிஞர்; முனைவர் இரா. நாகசாமி & வட்டெழுத்தில் வல்லவர் என்று இவரைப் பாராட்டியுள்ளனர்.



தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவனம் என்னும் அமைப்பை அமைத்தல்



அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவனம்என்னும் ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதில் சில ஆய்வு அறிஞர்களை இணைத்துக்கொண்டு பல அரிய தொல்பொருள்களைக் கண்டுபிடிப்பதற்கு உதவியுள்ளார். மேலும் தொண்டை மண்டல வரலாற்றுக் கருத்தரங்குகளைஇவ்வமைப்பின் மூலம் இதுவரை பன்னிரண்டு நடத்தியுள்ளார்.



முத்தரையர் சங்கம் பாராட்டு



முத்தரையர்என்ற நூலை எழுதியதற்காக முத்தரையர் சங்கம்புதுக்கோட்டையிலும், முத்தரையர் வரலாற்றாய்வு மையம் திருச்சியிலும் இவரை மிகைப்படப் பாராட்டியது. 2007&இல் திருச்சியல் இவருக்கு மலர் மகுடம் சூட்டி மகிழ்ந்தது.



திருப்பூர்த் தமிழ்ச் சங்கம் பாராட்டு



இவரது நூலான தமிழகம் அரப்பன் நாகரிகத் தாயகம்என்னும் நூலுக்குப் பரிசளித்துப் பாராட்டியது.



2006-இல் இவரது நூலான தமிழகச் சிற்பிகள் வரலாறுஎன்னும் நூலை வெளியிட்டு, இவருக்கு ரூ. 5,000 பண முடிப்பைச் சிற்பச் சித்தர் பத்மபூஷன் வை. கணபதி ஸ்தபதி அவர்கள் வழங்கிப் பாராட்டினார்.



வரலாற்றுப் பேரறிஞர்



2009-இல், திருவையாறு, “தமிழய்யா கல்விக் கழகம்நாகப்பட்டினத்தில் நடத்தியக் கருத்தரங்கில், இவருக்குச் சிறந்த வரலாற்றுப் பேரறிஞருக்கான கரிகாற் சோழன்விருதை வழங்கிச் சிறப்பித்தது.



நூல்கள்:



இவர் தமிழிலும், ஆங்கில மொழியிலும் தொண்ணூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதிச் சிறப்பித்திருக்கிறார்.



குடும்பம்



இவருக்குத் திலகவல்லி என்ற இல்லத்தரசியாரும், கதிரவன், அருண்மொழி, ஆதித்யன் என்ற மகன்களும், க.ஜெயந்தி, அ. இரமா, ஆ. இரம்யா ஆகிய மருமகள்களும், க. அரிணி, க. புனிதன், அ.ஈரா, ஆ. சேந்தன் ஆகிய பெயரப்பிள்ளைகளும் உள்ளனர்.



தொல்லியறிஞர் நடன. காசிநாதன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கண்ணியம்இதழ் கண்ணியப் பெருமக்கள்வரிசையில் வெளியிட்டு வரலாற்று அறிஞர்என்று சிறப்பித்து மகிழ்ந்தது.





தொல்லியலறிஞர் நடன. காசிநாதன் அவர்கள் எழுதிய

நூற்கள் பட்டியல்




ENGLISH BOOKS

S.No. Name of the Book Author / Editor, Year
1. Hero Stones in Tamil Nadu Author 1978

2. Functions of the Department of
Archaeology Author 1989

3. Under Sea Exploration off the shore of
Pumpuhar Author 1991

4. The Metropolis of the Medieval Cholas -
(First Edition) Author 1992

5. Seminar on Marine Archaeology Author 1992

6. Art panorama of the Tamils Joint Author 1993

7. Padavedu Excavation Author 1993

8. Alagankulam - A Preliminary Report of
Excavation General Author 1994

9. Collected papers (Studies in Tamil Culture) Author 1994

10. Achievements of Archaeology Department Author 1994

11. Ancient Industries of Tamil Nadu Author 1994

12. Cultural Heritage of Tamil Nadu Author 1997


13. Ancient Ports of Tamil Nadu and their
trade contact with Foreign Countries Author 1997

14. Tirukkoyilur Excavation Joint Author 1998

15. The Metropolis of the Medieval Cholas
(Second Edition) Author 1998

16. Tamils Heritage Author 2000

17. Ancient Port Towns and their busy Trade
Activities, Capital Cities and Trade
Contact (Under Print). Author

18. Hero-Stones, Pallava Period (Under Print) , Author

19. Cultural Heritage of the Tamils. June 2010


20.கல்வெட்டின் கதை, ஆசிரியர்,1968
21.கன்னியாகுமரிக் கல்வெட்டுகள் (முதல்தொகுதி), பதிப்பாசிரியர்,1972
22.கன்னியாகுமரிக்கல்வெட்டுகள்இரண்டாம்தொகுதி),பதிப்பாசிரியர், 1972
23.கன்னியாகுமரிக்கல்வெட்டுகள் (மூன்றாம் தொகுதி), பதிப்பாசிரியர், 1972
24.கல்வெட்டியல், இணை ஆசிரியர், 1973
25.கல்வெட்டு ஓர் அறிமுகம், இணை ஆசிரியர், 1973
26.காலச் சுவடுகள், ஆசிரியர், 1973
27.ஆய்வுக் கொத்து, இணை ஆசிரியர்,1973
28.பூம்புகார், இணை ஆசிரியர், 1973
29.மனோரா, ஆசிரியர், 1975
30.ஆய்வுத்தேன், இணை ஆசிரியர், 1976
31.முத்தரையர் (முதற் பதிப்பு),ஆசிரியர், 1976
32.முத்தரையர் (இரண்டாம் பதிப்பு), ஆசிரியர், 1994
33.தொல்லியல் கட்டுரைகள், ஆசிரியர், 1977
34.களப்பிரர், ஆசிரியர், 1981
35.தொல்லியல் கருத்தரங்கம், பகுதி - 11 பொதுப் பதிப்பாசிரியர், 1983
36.இராசராசேச்சுரம், ஆசிரியர், 1984
37.அருண்மொழி, பதிப்பாசிரியர், 1988
38.கல்லெழுத்துக்கலை,(தமிழ்நாடுஅரசு பரிசு பெற்றது),ஆசிரியர்,1989
39.தமிழக வரலாற்றுச் சின்னங்கள், ஆசிரியர், 1989
40.கண்டி மன்னர் கல்லறை, ஆசிரியர், 1989
41.வளரும் தமிழகத்தில் மலரும், மாவட்டத் தலைநகர் நாகப்பட்டினம், ஆசிரியர், 1991
42.திருக்கோடிகா கல்வெட்டுகள், பொதுப் பதிப்பாசிரியர், 1992
43.கும்பகோணமும் மகாமகப் பெருவிழாவும், இணை ஆசிரியர், 1992
44.தமிழகத்தில் தொல்மாந்தர் பண்பாடு, ஆசிரியர், 1993
45.தமிழ்க் கீர்த்தனைகள், பொதுப்பதிப்பாசிரியர், 1993
46.திருக்குறள் பழைய உரை, பொதுப்பதிப்பாசிரியர், 1993
47.திருவீழிமிழலைக் கல்வெட்டுகள், பொதுப் பதிப்பாசிரியர், 1994
48.தமிழர் நாகரிகம்,பதிப்பாசிரியர்,1996
49.தமிழர் காசு இயல்,(முதல் பதிப்பு),ஆசிரியர் 1995
50.தமிழர் காசு இயல் (இரண்டாம் பதிப்பு),ஆசிரியர், 2003
51.பெருமுக்கல் கல்வெட்டுகள், இணைத் தொகுப்பாளர், 1998
52.தொல்லியல்துறையின், அரியகண்டுபிடிப்புகள், இணைஆசிரியர்,1998
53.பூம்புகாரும், கடல் அகழாய்வும்,ஆசிரியர் , 1999
54.அரசு கீழ்த்திசை ஓலைச்சுவடி நூலக வெளியீடுகள் (மொத்தம் 51) பொதுப் பதிப்பாசிரியர், 1991-1998
55.தமிழர் தெய்வங்கள், ஆசிரியர், 2003
56.வன்னியர், ஆசிரியர், 2001
57.தடயம், இணை ஆசிரியர், 2000
58.வரலாற்றுத் தடயம், ஆசிரியர், 2002
59.தொன்மைத் தடயம்,இணை ஆசிரியர், 2003
60.மாமல்லபுரம், ஆசிரியர், 2000
61.தமிழ் எழுத்தியல் வரலாறு, இணை ஆசிரியர், 2004
62.சோழ வேந்தர் பரம்பரை பிச்சாவரம் வன்னியப் பாளையக்காரர் வரலாறு, (முதல் பதிப்பு) ஆசிரியர், 2005
63.பண்டைத் தடயம், இணை ஆசிரியர், 2005
64.வன்னியர் மாட்சி, ஆசிரியர், 2005
65.சமணத் தடயங்கள், இணை ஆசிரியர், 2005
66.தமிழகச் சிற்பிகள் வரலாறு, ஆசிரியர், 2006
67.வன்னியர் வரலாறு, முதல்தொகுதி,பதிப்பாசிரியர், 2007
68.தமிழகம் அரப்பன் நாகரிகத் தாயகம் (திருப்பூர்த் தமிழ்ச் சங்கம் பரிசு பெற்றது), ஆசிரியர், 2006
69.வேலூர் மாவட்டத் தடயங்கள், தொகுதி 1, இணை ஆசிரியர்; 2008
70.வேலூர் மாவட்டத் தடயங்கள், தொகுதி 2, இணைஆசிரியர், 2008
71பெரம்பலூர் மாவட்டத் தடயங்கள், இணை ஆசிரியர், 2008
72.வன்னியர் (இரண்டாம் பதிப்பு), ஆசிரியர், 2008
73.தமிழகவரலாற்றுவரிசை (களப்பிரர்காலத் தமிழகம்), ஆசிரியர், 2008
74.கடலூர் மாவட்டத் தடயங்கள் தொகுதி 1, இணை ஆசிரியர், 2009
75.கடலூர் மாவட்டத் தடயங்கள், தொகுதி 2, இணை ஆசிரியர், 2009
76.தொன்மைத் தமிழும் தொன்மைத்தமிழரும், ஆசிரியர், 2009
77.வன்னியர் வரலாறு,இரண்டாம்தொகுதி, பகுதி1, பதிப்பாசிரியர், 2009
78.வன்னியர் வரலாறு,இரண்டாம்தொகுதி,பகுதி2 , பதிப்பாசிரியர், 2009
79. இராசராசேச்சுரம் (இரண்டாம் பதிப்பு),ஆசிரியர் ,டிசம்பர், 1994
80.கல்வெட்டு ஓர் அறிமுகம் (இரண்டாம் பதிப்பு), இணை ஆசிரியர், 2008
81.சோழவேந்தர் பரம்பரைவன்னியப்பாளையக்காரர் வரலாறு, (இரண்டாம்பதிப்பு) ஆசிரியர், ஆகஸ்ட், 2009
82.கல்லெழுத்துக் கலை, (இரண்டாம் பதிப்பு),ஆசிரியர், டிசம்பர்,2009
83. தமிழர் பண்பாட்டுச் சிதறல்கள், ஆசிரியர், ஜுன் 2010
84.நெல்லை அதன் வரலாற்றெல்லை, ஆசிரியர், செப்டம்பா; 2010
85.காஞ்சிபுரம் மாவட்டத் தடயங்கள், இணை ஆசிரியர், செப்டம்பா; 2010
86. வன்னியர் மாட்சி (இரண்டாம் பதிப்பு), ஆசிரியர், ஆகஸ்ட் 2010
87.இராசராசேச்சுரம் (மூன்றாம் பதிப்பு), ஆசிரியர், செப்டம்பா; 2010
88.தென் பகுதிப் பாளையக்காரர்கள் வரலாறு, ஆசிரியர், ஏப்ரல் 2011
89. தமிழக வரலாற்றுத் தடயங்கள், ஆசிரியர், ஜுலை 2011
90.சோழர் செப்பேடுகள், ஆசிரியர், ஜுலை 2011
91.சோழர் செப்பேடுகள், ஆசிரியர், 2012
92.காஞ்சிபுரம் மாவட்டக் கலைகள், தொகுதி 1, இணை ஆசிரியர், 2012
 
 
முனைவர் மு.இளங்கோவன் எழுதியது