புதன், 3 அக்டோபர், 2012

சிக்கலெல்லாம் தீர்க்கும் சடைவுடை சிவலிங்கம்

தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயம், தொன்மைக்கும் அழகுக்கும் கட்டிடக் கலைக்கும் இன்றும் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது. இந்த பிரகதீஸ்வரர் ஆலயம் அமைவதற்கே முன்மாதிரியாக ஓர் ஆலயம் நம் தமிழ்நாட்டில் உள்ளது! ஆம், திருச்சென்னம் பூண்டியில் உள்ள சடையார் ஆலயம்தான் அது. காவிரி நதியின் வடகரையில் சுற்றிலும் பசுமையான தோப்புகள், தேக்கு மரங் கள், வயல் வெளிகள் என பசுமை போர்த்திய சூழலில் ஆலயம் அமைந்திருக்கிறது. 1000 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டிடக் கலையையும் சிற்பக் கலையையும் தாங்கியபடி, ஆனால் முறையான பராமரிப்பு இல்லாமல், சிதைவுப் போர்வையும் போர்த்தியிருக்கிறது. முதல் பராந்தகன், பல்லவர் தொள்ளாற்றெறிந்த நந்தி நிருபதொங்கவர்மன், முத்தரையர் கோ.இளங்கோ முத்தரையர் ஆகியோர் காலத்தில் கட்டப்பட்ட ஆலயம் இது.

திருக்கடைமுடி மகாதேவர் கோயில் என வழங்கப்பட்ட இந்த ஆலயம், தற்போது சடையார் கோயில் என்றே அழைக்கப்படுகிறது. ஆலயம் திறந்த வெளியில் அமைந்துள்ளது. மதில் சுவரோ, சுற்றிவர பிராகாரமோ எதுவும் கிடையாது. இங்கு அருள்பாலிக்கும் இறைவன், திருக்கடையுடைய மகாதே வர்; இறைவி, சித்தாம்பிகா. இறைவியின் ஆலயம் தென்திசை நோக்கி தனியாக அமைந்துள்ளது. இறைவிக்கு நான்கு கரங்கள். அன்னை தனது மேல் வலது கரத்தில் சங்கினையும் மேல் இடது கரத்தில் கதையையும் தாங்கி அருள்புரிகிறார். கீழ் இரு கரங்கள் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் திகழ்கின்றன. இறைவனின் ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. ஆலயம் மிகவும் சிதைந்துள்ளதால் இறைவனின் திருமேனியை இறைவியின் ஆலயத்திலேயே வைத்துள்ளனர்.
சிவலிங்கத் திருமேனி முழுவதும் சடை வடிவங்கள் நிறைந்து காணப்படுகிறது. எனவே இவர் சடையார் என்ற காரணப் பெயருடன் அழைக்கப்படுகிறார்.

சடைபோல சிக்கல் மிகுந்த பல பிரச்னைகளைத் தீர்த்துவைப்பதில் இந்த இறைவன் பேரருள் புரிகிறார். தேவக் கோட்டத்தில் வட திசையில் து ர்க்கையும் வடக்குப் பிராகாரத்தில் சண்டீஸ்வரரும் உள்ளனர். சம்பந்தரால் பாடப்பெற்ற தலம் இது. 21 கல்வெட்டுகளை தொல்பொருள்துறை கண்டுபி டித்துள்ளதாக ஊர் மக்கள் கூறுகின்றனர். தொள்ளாற்றெறிந்த நந்தி வர்மன் மனைவி மாதேவியும் அவர்கள் மகளின் கணவர் அடிகள் கண்டன் மாறன் பாவை என்பவரும் இந்த ஆலயத்தில் ஏழு நாட்கள் திருவிழா நடைபெற பொன்னும் பொருளும் கொடுத்து உதவிய தகவலும் இங்கு காணமுடிகிறது. நவாப் மன்னர்கள் தென்நாட்டை ஆண்டபோது சிதைக்கப்பட்ட ஆலயங்களில் இதுவும் ஒன்று. 2 கி.மீ. தொலைவில் உள்ள கோவிலடி என்ற ஊரில் உள்ள பெருமாள் ஆலயத்திற்குச் செல்ல இந்த ஆலயத்திலிருந்து சுரங்கப் பாதை இருந்ததாம். ஆலயம் முழுவதும் கருங்கற்களாலேயே உருவாகியி ருக்கிறது.

சீதை இலங்கையில் சிறைபட்டிருந்தது, ராமாயணப்போர், அழகுப் பெண்களின் அற்புத நடனக் காட்சி, யாளி முதலான காட்சிகள் இறைவன் ஆலயத்தைச் சுற்றியுள்ள சுவர்களில் அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளன. கலை ஆர்வமிக்க வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பலர் தஞ்சை பெரிய கோயில், திருவரங்கம் அரங்கநாதர் ஆலயம் என இரண்டையும் பார்த்துவிட்டு இந்த ஆலயத்தையும் கண்டுகளித்து மெய் சிலிர்க்கின்றனர். தஞ்சை மாவட்டம் கல்லணை-திருவையாறு வழித்தடத்தில் உள்ள கோவிலடி என்ற ஊரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. பேருந்து இல்லை; ஆட்டோ வசதி மட்டுமே உண்டு.

ஆலயத்தொடர்புக்கு: 8903442814 ஜெயவண்ணன்

News From : DINAKARAN

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக