செவ்வாய், 11 மார்ச், 2014

பெரம்பலூர்-முத்திரை பதிப்பது முத்தரையர்

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுக்குள் பெரம்பலூர், துறையூர், முசிறி, மண்ணச்சநல்லூர், லால்குடி, குளித்தலை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகள் அடங்கியிருக்கிறது. பெரும்பாலும் அ.தி.மு.க. அல்லது தி.மு.க. கூட்டணியே பெரம்பலூரில் கோலோச்சிக் கொண்டிருக்கும். இந்தத் தொகுதியை மற்ற கட்சிகள் கேட்கவே கேட்காது. ஆனால், கடந்தமுறை தைரியமாக விஜயகாந்த் தனது வேட்பாளரை இங்கே நிறுத்தினார். விஜயகாந்தால் நிறுத்தப்பட்ட துரை.காமராஜ் சுமார் எண்பதாயிரம் வாக்குகள் பெற்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். பிரமிப்பு காட்டினார்.

இந்தியா முழுவதுக்கும் நன்கு அறிமுகமான தொகுதி பெரம்பலூர். என்ன காரணம் என்கிறீர்களா? ஸ்பெக்ட்ரம் ஊழல் இந்தியாவையே உலுக்க வட இந்திய சேனல்கள் பெரம்பலூருக்கே வந்து இறங்கியது. காரணம் ஆ.ராசாவின் சொந்த ஊரே இந்தத் தொகுதிதான். தமிழ்நாட்டிலும் பெரம்பலூருக்கு ஏக சிறப்புகள் உண்டு. குறிப்பாக தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட தங்க நாற்கர சாலைகளில் வாகன ஓட்டிகள் ரசிப்பது இந்த ஊர் வழியாக செல்லும் சாலையைத்தான். மிதமான மேடுகள், பெரிதான பாலங்கள் என வெளிநாட்டு சாலைகளை நினைவுபடுத்தும் வகையில் பெரம்பலூரை ஒட்டிப்போகும் சாலைகள் இருக்கும். பெரிய ஊர்களை இணைக்கும் மேம்பாலங்கள் இந்த மாவட்டத்தில்தான் அதிகம். இந்த சாலை பணிகள் நடந்தபோது ராசா பெரம்பலூரின் எம்.பி.யாக இருந்து தன் ஊர் சாலைகளை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டார். பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே பெரம்பலூருக்கு பல தொழிற்சாலைகளைக் கொண்டு வந்தார் ராசா. அதில் முக்கியமானது எம்.ஆர்.எஃப். தொழிற்சாலை.


மருதைராஜ்
 

ராஜசேகரன்

 

சீமானூர் பிரபு
 

செல்வராஜ்

ராசா இருந்தவரையில் ரிசர்வ் தொகுதியாக பெரம்பலூர் இருந்தது. பிறகு பொதுத் தொகுதியாக மாற்றப்பட, 2009-ம் வருடம் நேருவின் தம்பி ராமஜெயத்துக்காக தொகுதி தயார் செய்யப்பட்டது. கடைசி நேரத்தில் அழகிரி தனக்கு தொகுதி வேண்டும் என்று தன் ஆதரவாளரான நெப்போலியனுக்கு தொகுதியை வாங்கிக் கொடுத்தார். ஆனால், நெப்போலியன் தொகுதிப் பக்கமும் தலைகாட்டவில்லை. நாடாளுமன்றத்துக்கும் சரியாகப் போகவில்லை. நெப்போலியன் நாடாளுமன்றத்துக்கான வருகைப் பதிவேட்டில் ஆறு சதவிகிதம்தான் இடம்பிடித்திருந்தார். இந்தமுறை நெப்போலியன் ஒதுங்கிவிட்டார். மீண்டும் தி.மு.க.வில் தொகுதி கேட்டு விருப்பமனு போடவில்லை. அதனால் தொகுதிவாசிகள் நிம்மதிப் பெருமூச்சுவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனந்த்

2009-ம் ஆண்டு தொகுதி சீரமைப்பிற்குப்பின் முத்தரையர்களின் கோட்டையாக மாறியது பெரம்பலூர் தொகுதி. கடந்தமுறை நெப்போலியனை எதிர்த்து அ.தி.மு.க. சார்பாக கே.கே.பாலசுப்பிரமணியன் போட்டியிட்டு தோற்றார். இந்த முறை தி.மு.க. சார்பில் சுமார் 30 பேர் தொகுதி கேட்டு பணம் கட்டியிருக்கிறார்கள். இவர்களில் முக்கியமானவர் முன்னாள் வனத்துறை அமைச்சர் செல்வராஜ். மற்றவர்கள், கடந்த சட்டமன்ற தேர்தலில் திருவரங்கம் தொகுதியில் முதல்வர் ஜெ.யை எதிர்த்து போட்டியிட்ட ஆனந்த், கரூர் கே.சி.பழனிச்சாமியின் மகன் சிவராமன் மற்றும் சீமானூர் பிரபு ஆகியோர் முக்கியமானவர்கள். நேர்காணலுக்கு வந்த கே.சி.பழனிச்சாமியிடம் அண்ணா அறிவாலயத்திலேயே நேரு, ‘‘இந்த தொகுதியெல்லாம் உங்களுக்கு சரிப்பட்டு வராது. வேறு தொகுதியைப் பார்த்துக்கோங்க’’ என்றாராம். கடுப்பான கே.சி.பி. ‘‘நீங்க இதை தலைவரிடமும், தளபதியிடமும் சொல்லுங்கள். அவர்கள் என்னிடம் பேசட்டும்’’ என்றாராம்.
நேரு சொன்னவருக்கே சீட் என்றாலும், பெரம்பலூரைப் பொறுத்தவரை ஆ.ராசாவுக்கு இன்னும் செல்வாக்கு குறையவில்லை. இவர் கைகாட்டும் நபருக்கே சீட் என்பது அறிவாலயத்தில் அறிவிக்கப்படாத விதி என்கிறார்கள். ராசாவின் சிபாரிசு பெற்ற வேட்பாளராக இப்போதைக்கு களத்தில் நிற்பவர் சீமானூர் பிரபு என்கிறார்கள்.
அ.தி.மு.க. முத்தரையர் சமூகத்தை சேர்ந்த மருதைராஜ்ஜை வேட்பாளராக அறிவித்திருக்கிறது. கடந்த எம்.பி. தேர்தலின்போது இவர் பெரம்பலூர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பிறகு மாற்றப்பட்டார். அதனால் இவருக்கு இப்போது சான்ஸ் கிடைத்திருக்கிறது. இவரைதவிர மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், கே.கே.பாலசுப்பிரமணியன், திலக் என்கிற கண்ணன் ஆகியோரும் சீட் கேட்டிருந்தார்கள். முத்தரையரின் கோட்டை என்பதால் மருதைராஜுக்கு வாய்ப்பு அதிகம் என்கிறார்கள்.
பா.ஜ.க. கூட்டணி கடந்தமுறை இங்கே போட்டியிடவில்லை. ஆனாலும் இந்தமுறை அந்தக் கூட்டணியில் இருக்கும் எஸ்.ஆர்.எம். பச்சமுத்துவின் ஐ.ஜே.கே. இந்தமுறை இங்கே போட்டியிடத் துடிக்கிறது. அந்தக் கட்சியின் சார்பாக ஜெயசீலன் என்பவர் களம் இறக்கப்படலாம் என்கிறார்கள் அல்லது பச்சமுத்துவே கூட பெரம்பலூரில் நிற்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். காங்கிரஸ் சார்பாக முன்னாள் தொட்டியம் தொகுதி எம்.எல்.ஏ.வான ராஜசேகரன் பெயர் அடிபடுகிறது. முத்தரையர் சமுதாயத்தைச் சார்ந்தவர் என்பதால் இவர் இங்கே பணம் கட்டியிருக்கிறார். இவருடைய இன்னொரு தகுதி வாசனின் தீவிர ஆதரவாளர். பொது தொகுதியாக இருந்தாலும் ஆ.ராசாவின் சகோதரர் கலியபெருமாளும் சீட் கேட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
கூட்டிக் கழித்துப் பார்த்தால் முத்தரையர் இனத்தைச் சார்ந்த ஒருவர் இந்த தொகுதியில் இம்முறை முத்திரை பதிப்பார் என்றே தெரிகிறது.
-‘ப்ரீத்தி’ கார்த்திக்

News Source : SIREN

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக