ஞாயிறு, 29 மே, 2016

மதகுபட்டி..!!

மதகுபட்டி..!!
முதலில் காலதாமதமான என்னுடைய கண்டனங்கள்...! 

இன்னும் நூறு ஆண்டுகளானாலும் அரசியல் அடிமைகளாய், நாகரீக அடிமைகளாய் இருக்கும் நாம் கொண்டாடும் எந்த பிறந்தநாள் விழாவும் என் பாட்டன் பேரரசன் பெரும்பிடுகுவிற்க்கு எந்த திருப்தியையும் தந்துவிட போவதில்லை..., அரசாண்டவனின் வாரிசுகள் இன்னும் அடிமையாய் இருப்பதையே விரும்புகிறார்களே என்ற ஆதங்கத்தினால் நான் இந்த ஆண்டு பேரரசரின் பிறந்தநாளினை கொண்டாடவில்லை..., :(

இப்படியே சற்றுவிலகி இருக்கலாம் என்று நினைத்தாலும் முடியவில்லை, :) முடிவாக‌ கண்டனங்களை பதிவு செய்து மீண்டு வருகிறேன் வழக்கமானவனாக...

சிவகங்கை மாவட்டத்தில் மதகுபட்டி, இப்படி சொல்வதைவிட "முத்தரையர் ஐடிஐ" இருக்கும் ஊர் என்றால் எளிதாக எல்லோருக்கும் தெரியும். அந்த ஊரில் வழக்கம்போலவே மே 23 ல் பேரரசருக்கு பிறந்தநாள்விழா அதை தடுக்க முயன்ற காவல்துறை முடிவில் கலவரம், கைது, வழக்கு.

ஒரு சமூகவிழா அல்லது குடும்பவிழா இதெற்கெதற்க்கு காவல்துறையின் அனுமதி....? ஒருவேளை அனுமதி வாங்குவது கட்டாயமென்றால், வாங்காமலே விழா நடக்கிறது என்றால், விழா தொடங்குவதற்க்கு முன்பே தடுக்க வேண்டும் அல்லது விழா நிறைவு செய்தபிறகு ஏற்பாட்டாளர்களை கைது செய்திருக்க வேண்டும், அல்லது இடையில் அந்த விழாவினால் யாருக்கேனும் பாதிப்பு, சமூக பதற்றம் ஏற்பட்டு இருக்க வேண்டும் இப்படி எந்தவிதத்திலும் பாதிப்பு இல்லாமல் நடக்கும் விழாவினை சீர்குலைக்க காவல்துறைக்கு என்ன அதிகாரம் இருக்கிறது....? விழாவை அனுமதியின்றி நடத்தியதன் மூலம் தனி நபர்களுக்கு, வேறு சமூகங்களுக்கு, அரசாங்கத்திற்க்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது ? எதுவுமில்லாதபோது ஏன் இந்த முட்டாள்தனத்தை ஒரு காவல் அதிகாரி செய்ய வேண்டும்..? 

ஒரு சமூக மக்கள் தன்னெழுச்சியாக கூடி தன்னுடைய மூதாதையருக்கு விழா எடுக்கும்போது தான் தோற்றிதனமாக ஒரு காவல் அதிகாரி நடந்துகொண்டதன் விளைவு என் சமூகம் "வன்முறையாளர்களாக" பொதுவெளியில் சித்தரிக்கப்படுகிறது.

பொறுப்புள்ள ஒரு காவல் அதிகாரி "அதிகார துஷ்பிரயோகத்தில்" ஈடுபடுவது வண்மையாக கண்டிக்கதக்கது, அதிலும் தென்மாவட்டம் என்றாலே சாதிய பதற்றம் நிறைந்தது, அதிலும் குறிப்பாக சிவகங்கை மாவட்டம் காவல்துறை அதிகாரிகள் அறியாததில்லை அப்படி இருக்கும்போது ஒரு பொருப்புள்ள அதிகாரி இப்படி கீழ்தரமாக நடந்துக்கொள்வது சகிக்க முடியாதது. 

அதிகாரத்தை கொண்டு எந்த தனி நபரையும் மிரட்டி பணியவைத்துவிடலாம், ஆனால் முத்தரையர் சமூகத்தை அப்படி ஒடுக்கிவிடலாம் என்று அதிகார வர்க்கம் நினைக்குமேயானால் அது பொய்த்துபோகும். காரணம் இந்த மக்களுக்கு அரசாங்கங்களைப்பற்றி, அதிகாரங்களைப்பற்றி எந்த அக்கரையும் கிடையாது, அவர்களுடைய தன்மானத்துக்கு ஒரு பிரச்சனையென்றால் பொங்கி எழுந்துவிடுவார்கள் அதைதான் சாதாரணமாக நினைத்து கையாள நினைத்த காவல்துறைக்கு மதகுபட்டியில் அன்றிரவே அதிர்ச்சி வைத்தியம் கிடைக்க காரணம்.

அந்த தினத்தில்தான் புதிய அரசாங்கம் பதவியேற்றது அதனால் நேரடியாக அவர்களை குறை சொல்ல முடியாது என்றாலும் அடுத்தடுத்த நாட்களிலாவது ஒரு விசாரணையை நடத்தி தவறிழைத்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், இன்றுவரை அதை செய்யாமல் இருப்பதன் மர்மம் புரியவில்லை..., நடவடிக்கை எடுக்காதவரை பதற்றத்தை தணிக்க வேறு வழியும் இல்லை. 

அதேபோல காவல்துறை மிக சமீபகாலங்களில் கையாலும் ஒரு விசயம் இரவு நேரங்களில் ஊருக்குள் புகுந்து கையில் சிக்குபவர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்து அச்சுறுத்துவது, அதிலும் குறிப்பாக முத்தரையர் மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் மட்டும் இதுபோன்ற நிகழ்வுகளை நான் தொடர்ந்து கவனித்துவருகிறேன். இப்படி செய்வதன் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகிவிடுகிறது. பொதுவாக இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் காவல்துறை, வருவாய்துறையினர் தலையிட்டு சமரச கூட்டங்களை கூட்டுவார்கள் மற்றபடி இப்போது இந்த சம்பவத்தில் செய்ததுபோல 800 பேர் மீது வழக்கு 90 க்கும் மேற்பட்டவர்கள் கைது என்பதெல்லாம் ஒரு சமூகத்தை அச்சுருத்தி பணியவைக்கும் முயற்சி, இது நிச்சயமாக பலனளிக்கும் வழியல்ல என்பதை விரைவில் அதிகார வர்க்கம் புரிந்துக்கொள்ளும். 

இந்த நிகழ்வின் மூலமாக ஒரே ஒரு மகிழ்ச்சி, இதுவரை யாருக்கோ கொண்டாடப்படும் பிறந்தநாள் என்று விலகிபோனவர்கள்கூட அடுத்தாண்டு முதல் உற்சாகமாக பேரரசருக்கு பிறந்தநாளினை கொண்டாட போகிறார்கள். அந்த வகையில் அதிகார வர்க்கத்திற்க்கும், அடக்குமுறைக்கும் நாம் நன்றி சொல்லத்தான் வேண்டும். 

-கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக