ஞாயிறு, 29 மே, 2016

அதிகார பரவல்...!



அதிகார பரவல்...!

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை ஏனைய சமூகங்களுக்கு எப்படியோ "முத்தரையர்" சமூகத்திற்க்கு லாபம்தான் :p கடந்த 2011-ல் அமைந்த சட்டமன்றத்தின் துவக்கத்தில் மூன்றாக இருந்து முடிவதற்க்கு முன்பு இடைத்தேர்தல்கள் மூலம் ஐந்தாக முடிந்து 2016 சட்டமன்ற தேர்தலில் மேலும் இரண்டு கூடி இப்போது "ஏழு" உறுப்பினர்களை கொண்டிருக்கிறது. இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமாக அம்சம் என்று நான் கருதுவது, இதுவரை முத்தரையர் மக்கள் என்றால் அது மத்திய மண்டலத்தில் இருக்கும் திருச்சியில் மட்டும்தான் என்ற தவறான பொதுபார்வை தேர்தல் / தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மூலம் அறியப்பட்டது, அந்த புரிதல் இந்த தேர்தலில் மாறியிருக்கிறது.

கடந்த 2011-ல் திருச்சி மேற்கு, முசிறி, மண்ண‌ச்சநல்லூர், ஸ்ரீரங்கம் என்ற திருச்சி மாவட்ட தொகுதிகளை தாண்டி புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இருந்து ஒரு பிரதிநிதிதான் (அவரும் திருச்சி மாவட்டத்துக்காரர்தான்) நம் இனத்தில் இருந்து சட்டசபைக்கு சென்றார்கள். இதன்மூலம் அதிகாரம் ஒரே மாவட்டத்தில் குவிக்கப்பட்டும், பொதுபார்வையில் ஏனைய மாவட்டங்களில் முத்தரையர்களே இல்லை என்பதுபோன்ற தோற்றத்தை உண்டாக்குவதாகவும் இருந்தது, மற்றபடி 2011-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து பேருமே திறமையால், ஆற்றலால் குறைத்து மதிப்பிட முடியாதவர்கள், திரு.பூனாட்சி, திரு.கு,ப.கிருஷ்ணன், திரு. சிவபதி, திரு. பரஞ்சோதி மற்றும் சகோதரி திருமதி. வளர்மதி என்று அனைவருமே அமைச்சர்களாக செம்மையாக செயல்பட்டவர்கள்..

ஆனால் இந்த முறை 2016 தேர்தல் மூலம் திருச்சி மாவட்டத்தில் கடந்த முறையை விட ஒன்று குறைந்து மூன்றாகவும் ( ஸ்ரீரங்கம்-வளர்மதி, மண்ணச்சநல்லூர்-பரமேஸ்வரி முருகன், முசிறி-செல்வராஜ்) ஏனைய மாவட்டங்களை பிரதிநிதிதுவப்படுத்தும் விதமாக மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே இருந்து இழந்த மேலூர் தொகுதியில் இருந்து பெரிய புள்ளான் என்கிற செல்வமும், திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து ஏற்கனவே 13 ஆண்டுகளுக்கு முன்பு அப்பா இழந்ததை மகன் ஆண்டி அம்பலம் மீட்டு இருக்கிறார், புதுக்கோட்டை மாவட்டத்தில் எப்போதுமே மாறாத ஆலங்குடி தொகுதியில் இருந்து திரு. மெய்யநாதனும், தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே இருந்து கடந்த தேர்தலில் இழந்த பேராவூரணி தொகுதியில் இருந்து திரு.கோவிந்தராஜனும் என்று அதிகாரம் பரவலாக திருச்சியை தாண்டி மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களுக்கும் பரவி இருக்கிறது.

இன்னும் அப்படி வாய்ப்புள்ள மாவட்டங்களில் கூடுதலாக உழைத்து அதிகாரத்தினை பெற ஏனைய மாவட்ட முத்தரையர் அரசியல்வாதிகளை வேண்டுகிறோம்.

இப்போது வென்றிருப்பவர்களில் ஐந்துபேர் அதிமுகவையும், இரண்டு பேர் (ஆலங்குடி, நத்தம்) திமுகவையும் சேர்ந்தவர்கள், இதில் இரண்டு பேர் பெண்கள் என்பதும் குறிப்பிட வேண்டிய விசயம், ஆளும்கட்சியில் இப்போது அமைச்சராக்கப்பட்டு இருப்பவர் அக்கா வளர்மதி (இவர் மட்டும்தான் இரண்டாவது முறை சட்டமன்ற உறுப்பினர் முத்தரையர் சமூகத்தில் இருந்து) இருந்தாலும் ஏனைய அதிமுக உறுப்பினர்களுக்கும் அமைச்சராகக் கூடிய வாய்ப்புகள் இருக்கிறது, வாய்ப்பு வரட்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.

இவ்வளவு விவரமாக சொன்னதன் மூலம் நான் சொல்ல வந்தது, இவர்கள் யாருக்கும் தனிப்பட்ட செல்வாக்குக்காக வாய்பளிக்கவில்லை அதிமுகவும், திமுகவும் அப்படி அவர்கள் கருதுவார்களேயானால் அவர்களை அவர்களே ஏமாற்றிக்கொண்டு சமூகத்தையும் ஏமாற்றுகிறார்கள் என்றுதான் அர்த்தம். இவர்களுக்கு இந்த தொகுதியில் கிடைந்த வாய்ப்பு என்பது "முத்தரையர்" என்ற ஒரே ஒரு தகுதிக்காக மட்டும்தான்.

ஆகவே தயக்கமில்லாமல் முத்தரையர் சமூகத்தின் வளர்ச்சிக்கு தங்களால் முடிந்த அளவு வாதிட்டு நன்மைகளை பெற்று தர வேண்டும், அய்யா ஆண்டி அம்பலம் பெரும்பாலான நேரங்களில் "முத்தரையர்" சமூகத்திற்காக சட்டமன்றங்களில் வாதாடி இருக்கிறார், அவருடைய மகனும் அப்படியே செய்ய வேண்டும் என்று உரிமையோடு வேண்டுகிறோம்.

நலம் பெறட்டும் என் சமூகம்.....!

-கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக